சுவரில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்குக் குறுக்காகத் தங்கள் கைகளை வைத்து
அவற்றின் வழியை மறிக்கும் குறும்புக்கார சிறுவர்களை நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்.
உடனடியாக அந்த எறும்புகள் வேறொரு வழியைக் கண்டுபிடித்து மீண்டும் நடைபோடும்.
அவன் அந்தப் பாதையைத் தடுத்தாலும், எறும்புகள் வேறொரு பாதையைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்லும்.
குறும்பின் காரணமாக, சுவரிலிருந்து சில எறும்புகளை அச்சிறுவன் விலக்கித் தள்ளுவான்.
அதையும் எதிர்த்துச் சமாளித்து,
அந்த எறும்புகள் மீண்டும் சுவரில் ஏறத் துவங்கும்.
தடைகள் எதுவாக இருந்தாலும் சரி,
முட்டுக்கட்டைகள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும் சரி,
"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையில் அவை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.
இறக்கும்வரை அவை முயற்சி செய்து, போராடி, இன்னும் தீவிரமாக முயன்று,
"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையை, இறக்கும்வரை அவை கொண்டிருக்கும்.
காளை மாடுகள் மேம்பாலங்களில் அளவுக்கதிகமான சுமைகளைச் சுமந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
மிகுந்த போராட்டத்துடன்
அவை ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்கும்.
இறுதியில்
அவை சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும்.
மனிதனின் சுயநலத்திற்கு அவை பலியாகியிருந்தாலும்,
தம் முயற்சியை அவை ஒருபோதும் கைவிடுவதில்லை.
புல், மற்றும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளும்கூட,
"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையுடன் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி வளர்கின்றன.
சாகும்வரை அவை
தம் சுயநம்பிக்கையை இழப்பதில்லை.
"என்னால் முடியும் "என்பது வாழ்வின் மொழி.
"என்னால் முடியாது " என்பது சாவின் மொழி.
வாழும் நாட்களெல்லாம்
வளங்கள் பல பெற்றிடவும்
உள்ளங்கள் ஒன்றாகத் துள்ளி
உவகை அடைந்திடவும்...
COMMENTS